மிரட்டிய ‘வேகங்கள்’... ஜொலித்த இந்தியா * தொடரை கைப்பற்றி அசத்தல் | ஜனவரி 21, 2023

தினமலர்  தினமலர்

ராய்ப்பூர்: ராய்ப்பூர் ஒருநாள் போட்டியில் இந்திய ‘வேகங்கள்’ போட்டுத் தாக்க, நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. 2–0 என தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதிய இரண்டாவது போட்டி ராய்ப்பூரில் கட்டப்பட்ட புதிய நாராயண் சிங் மைதானத்தில் முதன் முறையாக நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங் தேர்வு செய்தார்.

ஷமி அபாரம்

நியூசிலாந்து அணிக்கு பின் ஆலென், கான்வே ஜோடி துவக்கம் கொடுத்தது. மறுபக்கம் இந்திய ‘வேகங்கள்’ போட்டுத்தாக்கினர். முகமது ஷமி வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆலென் (0) போல்டானார். அடுத்து வந்த நிகோல்சை (2) முகமது சிராஜ் வெளியேற்றினார். மறுபடியும் மிரட்டிய ஷமி, மிட்செல் (1) அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்து அனுப்பினார்.

கான்வே (7) ஹர்திக் பாண்ட்யாவின் அசத்தலான ‘கேட்ச்சில்’ திரும்பினார். ஷர்துல் தாகூர் தன் பங்கிற்கு கேப்டன் டாம் லதாமை (1) பெவிலியன் அனுப்ப, நியூசிலாந்து அணி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. முதல் போட்டியில் சதம் விளாசிய பிரேஸ்வெல், பிலிப்ஸ் இணைந்து அணியை மீட்க போராடினர். மீண்டும் வந்த ஷமி இம்முறை பிரேஸ்வெலை (22) அவுட்டாக்கினார்.

சான்ட்னர் (27) போல்டானார். வாஷிங்டன் சுந்தர் சுழலில் பிலிப்ஸ் (36), பெர்குசன் (1) சரண் அடைந்தனர். குல்தீப் பந்தில் டிக்னெர் (2) அவுட்டானார். நியூசிலாந்து அணி 34.3 ஓவரில் 108 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் ஷமி 3, பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

நல்ல துவக்கம்

போகிற போக்கில் எட்டி விடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித், சுப்மன் கில் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஷிப்லே வீசிய நான்காவது ஓவரில் சுப்மன், ரோகித் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். பெர்குசன் பந்தில் சிக்சர் அடித்த ரோகித், டிக்னெர் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். டிக்னெர் வீசிய 10 வது ஓவரில் அசத்திய ரோகித், 3, 4வது பந்துகளில் பவுண்டரி, சிக்சர் விளாச இந்திய அணி 10 ஓவரில் 52/0 ரன் எடுத்தது.

தொடர்ந்து மிரட்டிய ரோகித், ஒருநாள் அரங்கில் 48 வது அரைசதம் எட்டினார்.

முதல் விக்கெட்டுக்கு 71 ரன் சேர்த்த போது, ரோகித் (51) ஷிப்லே பந்தில் அவுட்டனார். கோஹ்லி (11) நிலைக்கவில்லை. கடைசியில் சுப்மன் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 20.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் (40), இஷான் (8) அவுட்டாகாமல் இருந்தனர். ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ஒருநாள் தொடரை 2–0 என இந்தியா கைப்பற்றியது.

 

யோசித்த ரோகித்

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ‘டாஸ்’ வென்றார். ‘அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்’ என வர்ணனையாளர் ரவி சாஸ்திரி கேட்டார். உடனே கையை தலையில் வைத்து யோசித்தார் ரோகித். அருகில் இருந்த நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதாம் இதைப்பார்த்து சிரித்தார். சில விநாடி யோசனைக்குப் பின் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.

 

சிறுவன் தொல்லை

நேற்று இந்திய அணி பேட்டிங் செய்த போது, டிக்னெர் வீசிய 10 ஓவரின் 4வது பந்தை ரோகித் சிக்சருக்கு அனுப்பினார். அப்போது சிறுவன் ஒருவன் மைதானத்துக்குள் புகுந்து ரோகித்தை கட்டி அணைத்தார். அங்கு வந்த பாதுகாவலர் அவரை அப்புறப்படுத்தினர். அப்போது ரோகித்,‘ சிறுவன் தான், விட்டுவிடுங்கள்,’ என்றார். 

 

15 ரன், 5 விக்.,

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் அரங்கில் குறைந்த ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்த அணிகள் வரிசையில் நியூசிலாந்து முதலிடம் பெற்றது. இதற்கு முன் 2022ல் இங்கிலாந்து அணி ஓவல் போட்டியில் 26 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. 

இந்த வரிசையில் பாகிஸ்தான் (29/5, கொழும்பு, 1997), ஜிம்பாப்வே (30/5, ஹராரே, 2005) அணிகள் அடுத்த இரு இடங்களில் உள்ளன.

 

இது மோசம்

ஒருநாள் அரங்கில் குறைந்த ரன்னில் முதல் 5 விக்கெட்டுகளை நியூசிலாந்து (15/5) இழந்தது இதுதான் முதன் முறை. இதற்கு முன் 2001ல் கொழும்பில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 18 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை நழுவவிட்டது. 

 

7

இந்திய மண்ணில் நியூசிலாந்து 7 ஒருநாள் தொடரில் மோதியது. 1988ல் 4–0, 1995ல் 3–2, 1999ல் 3–2, 2010ல் 5–0, 2016ல் 3–2, 2017ல் 2–1, 2023ல் 2–0 என இவை அனைத்திலும் இந்தியா வென்றது. 


11

ஒருநாள் அரங்கில் நியூசிலாந்தின் முதல் 5 பேட்டர்கள் இணைந்து நேற்று 11 ரன் மட்டும் எடுத்தனர். இதற்கு முன் 2001ல் இலங்கை போட்டியிலும் நியூசிலாந்து 11 ரன் எடுத்தது. ஆண்கள் ஒருநாள் போட்டியில் ‘டாப்–5’ வீரர்கள் இணைந்து எடுத்த குறைந்த பட்ச ஸ்கோராக இது அமைந்தது. 

* தவிர இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் எதிரணியின் முதல் 5 பேட்டர்கள் எடுத்த குறைந்த பட்ச ஸ்கோரும் இது தான். இதற்கு முன் இலங்கை 12 ரன் (2003) எடுத்து இருந்தது.

 

108

நியூசிலாந்து அணி நேற்று 108 ரன்னுக்கு சுருண்டது. ஒருநாள் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக தனது மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோரை (15 ரன்/5 விக்.,) பதிவு செய்தது. 2016ல் 79/10 (விசாகப்பட்டனம்), 2010ல் 103 (சென்னை) ரன்னில் ஆல் அவுட்டானது, முதல் இரு இடத்தில் உள்ளது.

 

1142 

சர்வதேச அரங்கில் களமிறங்கிய முதல் 20 ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் சுப்மன் கில். இவர் 1142 ரன் எடுத்துள்ளார். பகர் ஜமான் (1089, பாக்.,), இமாம் உல் ஹக் (1082, பாக்.,), விவியன் ரிச்சர்ட்ஸ் (994, வெ.இண்டீஸ்), அடுத்த 3 இடங்களில் உள்ளனர்.

மூலக்கதை